Publish Date: Mon, 24 Nov 2008 (17:23 IST)
Updated Date: Mon, 24 Nov 2008 (17:22 IST)
உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் விமானப் படை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று விமானப் படையின் மேற்குப் பிராந்திய தலைமைத் தளபதி பி.கே. பார்போரா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துத் தலைநகர் புது டெல்லி இன்று தொடங்கிய விமானப் படையின் மேற்குப் பிராந்திய கமாண்டர்கள் மாநாட்டில் அவர் பேசுகையில், "பொருளாதார நெருக்கடி நமது நாட்டுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகளில் நிச்சயமற்ற நிலை உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்." என்றார்.
விமானப் படையில் ஆயுதங்கள், மனித வளம் ஆகியவற்றை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். இதற்காக நமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆயுதங்கள், எரிபொருள் வீணாகாமலும், நடைமுறைச் செலவுகள் அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
எனினும் பாதுகாப்பை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்று வலியுறுத்திய பார்போரா, நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்த பயிற்சி அளிப்பதன் மூலம் எரிபொருள் விரயமாவதைத் தடுக்க முடியும். செலவுகளைக் கட்டுக்குள் வைக்க முப்படையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.