பயங்கரவாதத்தை ஒடுக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (POTA) போன்ற கடுமையான சட்டங்கள் எதுவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தனித்தனியாக சிறப்புப் படைகளை உருவாக்கிக்கொள்ளுமாறு ஆலோசனை தெரிவித்தார்.
தலைநகர் புது டெல்லியில் இன்று நமது நாட்டு காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டைத் துவங்கி வைத்துப் பேசிய அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பயங்கரவாதத் தாக்குதல் வழக்குகளை தாமதங்களின்றி விரைவாக முடிப்பதற்கு ஏதுவாக, அவ்வழக்குகளை விசாரிப்பதற்கான மத்திய அமைப்பு ஒன்றை உருவாக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தற்போதைய சட்டங்களைக் கொண்டே மத்திய அமைப்பை உருவாக்க முடியும் என்ற சிவராஜ் பாட்டீல், பயங்கரவாதிகள் ஒரு மாநிலத்தில் தங்கள் தாக்குதலை நடத்திவிட்டு மற்றொரு மாநிலத்திற்குள்ளோ அல்லது நாட்டிற்குள்ளோ புகுந்து தப்பித்துக்கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதால், மத்திய அமைப்பை விரைவாக உருவாக்க மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மனித உரிமைகளுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (POTA) போன்ற கடுமையான சட்டம் எதுவும் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று மறுத்த சிவராஜ் பாட்டீல், பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளுக்கு ஏதாவது சில புதிய வசதிகள் தேவைப்பட்டால் அவை தற்போதுள்ள சட்டங்களைக் கொண்டே செய்து தரப்படும் என்றார். குறிப்பிட்ட விடயம் மத்திய அரசால் ஆலோசிக்கப்பட்டு அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
பயங்கரவாதத்தை முறியடிக்க சிறப்பு அதிரடிப் படைகளை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், மாநில அரசுகள் தங்களின் பாதுகாப்புப் படையினருக்கு பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"இது எல்லா மாநிலங்களுக்கும் பயனளிக்கும். பயங்கரவாதத்தை முறியடிக்க சிறப்புப் படைகளை உருவாக்குவதற்கு குறைந்தபட்சமாக பயங்கரவாதத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மட்டுமாவது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சிவராஜ் பாட்டீல் ஆலோசனை தெரிவித்தார்.