Publish Date: Fri, 21 Nov 2008 (01:51 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (01:51 IST)
விவசாய உயர் கல்வி மேம்பாட்டுக்கும் அதை வலுப்படுத்துவதற்கும் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
11வது ஐந்தாண்டு திட்டத்தில் இதற்காக ரூ.2,276.65 கோடி செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாய பல்கலைக்கழங்களை மேம்படுத்த ரூ.1,125 கோடியும், உயர் கல்விக்காக ரூ.135 கோடியும் ஒதுக்கப்படும்.
மேலும் தரமான கல்வியை அளிக்க ரூ.3 கோடியும், மனிதவள மேம்பாட்டிற்காக ரூ.216.7 கோடியும், விவசாய பல்கலைக்கழகங்களில் பண்ணைகளை நவீனப்படுத்த ரூ.421.95 கோடியும் ஒதுக்கப்படும்.
விவசாய கல்வியை தரமுள்ளதாக்கவும் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கவும், மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்தவும் இதில் வகை செய்யப்படும். விவசாய கல்வியில் மற்ற வெளிநாட்டு பல்கலைக்கழங்களுடன் போட்டியிடும் வகையில் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கவும் தேசிய அளவில் இத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் சிறந்த விஞ்ஞானிகளையும் வல்லுனர்களையும் உருவாக்கவும் இது வகை செய்கிறது.
விவசாய பல்கலைக்கழகங்களை நன்கு வலுப்படுத்த இந்த நிதி ஒதுக்கீட்டில் வகை செய்யப்பட்டுள்ளது. வகுப்பறைகளை கட்டுவது, மாணவ மாணவிகளுக்கு தங்குமிடங்களை அமைப்பது, நூலகங்கள், விளையாட்டு மைதானம், தேர்வு கூடங்கள் ஆகியவற்றை அமைப்பது போன்ற கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படும்.
Webdunia
Publish Date: Fri, 21 Nov 2008 (01:51 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (01:51 IST)