Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமருடன் முபாரக் சந்திப்பு: இந்தியா-எகிப்து ஒப்பந்தம்!

Advertiesment
பிரதமருடன் முபாரக் சந்திப்பு: இந்தியா-எகிப்து ஒப்பந்தம்!
, புதன், 19 நவம்பர் 2008 (10:32 IST)
அணிசேரா நாடுகள் அமைப்பை உருவாக்கிய பெருமைக்குரிய இந்தியாவும், எகிப்தும் தங்களுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தம் உட்பட 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும் தீவிரவாத்தை எதிர்த்துப் போராடுவதில் இணைந்து செயல்படுவது என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் புதுடெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசியபின், இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் எகிப்து அதிபர் இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் பேச்சுகள் நடத்தினர்.

வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம், நாட்டின் அறிவுசார் திறமைகளை பயன்படுத்திக் கொள்ள எகிப்து விரும்புவதால், அவை தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தகம, தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பு, விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

அரசின் உயர் அதிகாரிகள், சிறப்புத் தூதர்கள், ராஜ்யரீதியான அதிகாரிகளுக்கு விசா வழங்குதலை நீக்க வகை செய்யும் ஒப்பந்தமும், சுகாதாரம், மருந்து ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கு வகை செய்யும் ஒப்பந்தங்களும் எஞ்சியவையாகும்.

இருதரப்புப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாகவும், நல்ல முறையிலும் அமைந்ததாக மன்மோகன் சிங்கும், முபாரக்கும் பின்னர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த சந்திப்பு ஏதுவாகும் என்று பிரதமர் கூறினார்.

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளும் கூட்டாக சேர்ந்து செயல்படுவது என்றும், சர்வதேச அளவிலான பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் இணைந்து பங்காற்றுவது என்றும் முடிவு செய்ததாக ஹோஸ்னி முபாரக் கூறினார்.

அடுத்த ஆண்டு கெய்ரோவில் அணி சேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாடு நடைபெற உள்ளதாகக் கூறிய முபாரக், தங்கள் நாட்டிற்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார். முபாரக்கின் அழைப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டார் என்றும் அரசு வட்டாரங்கள் கூறின.

Share this Story:

Follow Webdunia tamil