Publish Date: Tue, 18 Nov 2008 (00:18 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:00 IST)
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் நடைபெறவுள்ள 3-வது தெற்காசிய சுகாதார மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைக்கிறார்!
புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் துவங்கும் இந்த மாநாடு குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
"கண்ணியம் மற்றும் உடல் நலத்திற்கு அடிப்படை சுகாதாரம்" என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்கிறார். இந்த மாநாடு 4 நாட்கள் நடைபெறுகிறது.
சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி, கழிவறைகளைத் தாண்டிய சுகாதாரம், சுகாதாரத் துறையில் நிறுவனங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கை உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன.
தெற்காசிய நாடுகளில் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது, மில்லினியம் வளர்ச்சி இலக்கான, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்தல், உலக மாநாட்டில் அளித்த நீடித்த வளர்ச்சி குறித்த உறுதி மொழியை நிறைவேற்றுதல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு முன்பாக 2003-ம் ஆண்டு வங்கதேசத்திலும், 2006-ம் ஆண்டு பாகிஸ்தானிலும் இரு சுகாதார மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உறுப்பினர்கள், சர்வதேச மற்றும் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாநில அதிகாரிகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு உறுப்பினர்கள், உள்ளூர் அமைப்பு மற்றும் சயஉதவிக் குழு உறுப்பினர்கள், சமூக அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.