சத்தீஷ்கர் மாநிலச் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 90 இடங்களில் முதல்கட்டமாக 39 இடங்களுக்கு நடந்த தேர்தலில் சுமார் 53 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நக்சலைட்டுகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு இடையிலும், சுமார் 63.9 லட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதிகபட்சமாக தாம்தாரி மாவட்டத்தில் 70 விழுக்காடும், மஹாசுமுண்ட் மாவட்டத்தில் 65 விழுக்காடும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ள பஸ்தார், தண்டேவாடா ஆகிய மாவட்டங்களில் முறையே 60 விழுக்காடு மற்றும் 45 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
27 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும், நக்சலைட்டுகளின் தாக்குதல் அபாயமுள்ள 12 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையும் வாக்குப் பதிவு நடந்தது.
மாநில முதல் அமைச்சர் ராமன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் மகேந்திர கர்மா, அவைத் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே, அமைச்சர்கள் ஹேமச்சந்த் யாதவ், லடா உசேண்டி, அஜய் சந்திராகர், கேதார் காஷ்யப் ஆகியோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
மீதமுள்ள 51 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது.