Publish Date: Fri, 14 Nov 2008 (06:03 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (06:02 IST)
கேரள மாநிலம் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இருவர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டதை அடுத்துக் காவலர்கள் நடத்திய சோதனையில் 125 சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்துக் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கு பொய்லூரில் உள்ள காலிக் குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த வெடிகுண்டுகளைத் தலசேரி சரகக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரகாசன் தலைமையிலான காவலர்கள் வியாழக்கிழமை கண்டுபிடித்தனர்.
செருவன்சேரி என்ற இடத்தில் கடந்த 10 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இருவர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டதை அடுத்துக் காவலர்கள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 18 நாட்டு வெடிகுண்டுகளைக் காவல் துறையினர் மறுநாளே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.