Publish Date: Wed, 12 Nov 2008 (04:07 IST)
Updated Date: Wed, 12 Nov 2008 (04:07 IST)
சென்னையில் 2009 ஜனவரி 7 முதல் 9 வரை நடக்கவுள்ள அயல்நாடு வாழ் இந்தியர் தினம் நிகழ்ச்சியில் உலகெங்கிலும் இருந்து சுமார் 1,500 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் அமைச்சகம், தமிழக அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் அயல்நாடு வாழ் இந்தியர் தினம்-2009 சென்னையில் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 7-ஆம் தேதியன்று பிரதமர் மன்மோகன் சிங் துவக்கவுரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து 9-ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிறைவுரை நிகழ்த்துகிறார். அத்துடன் பிரவாசி பாரதிய சம்மான் விருதுகள்-2009-யும் வழங்குகிறார். பல்வேறு மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த விழாவிற்காக தற்போது நடைபெற்று வரும் ஏற்பாடுகள் குறித்து புது டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சிங்கப்பூர் அதிபர் தலைமை விருந்தினராக பங்கேற்க இருப்பதாக மத்திய அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் அமைச்சக செயலர் கே. மோகன்தாஸ் தெரிவித்தார். மேலும் இரு நாட்டு குடியரசுத் தலைவர்களும் மற்றும் பல்வேறு நாட்டு அமைச்சர்களும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த பெரிய விழாவில் 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்பதாக உறுதி கூறியுள்ளன. இதில் மாநில முதல்வர்கள் மாநாடு, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.