Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திர தேர்தலில் சாதனை படைப்பேன் - சிரஞ்சீவி!

ஆந்திர தேர்தலில் சாதனை படைப்பேன் - சிரஞ்சீவி!
, வியாழன், 6 நவம்பர் 2008 (23:42 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கும் பராக் ஒபாமாவைப் போல், ஆந்திர சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைப்பேன் என்று பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி கூறியிருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் `பிரஜா ராஜ்யம்' என்ற பெயரில் அண்மையில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் சிரஞ்சீவி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.

கம்மம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவில் பராக் ஒபாமா வெற்றி பெற்றது போல் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் தாம் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பேன் என்று கூறினார்.

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளின் அடுத்தடுத்த ஆட்சிகளால் மாநிலம் வஞ்சிக்கப்பட்டு விட்டதாகவும், இதனால் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் சிரஞ்சீவி கூறினார்.

அமெரிக்காவில் உள்ள மக்கள் மாற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் வாக்களித்து ஒபாமாவை வெற்றிபெறச் செய்திருப்பதைப் போல, ஆந்திர மாநில மக்களும் மாற்றத்திற்காக பிரஜா ராஜ்யம் கட்சியை தேர்வு செய்வார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் தமது கட்சி காங்கிரசை வீழ்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே பிரபல ஆந்திர ஜோதிடரான முதுகண்ட கோபி கிருஷ்ணா என்பவர் வெளியிட்டுள்ள கணிப்பில், பராக் ஒபாமாவிற்கும், சிரஞ்சீவிக்கும் பெயர் கூட்டுத்தொகை எண் ஒரே மாதிரி இருப்பதாகவும், எனவே ஒபாமா போன்று சிரஞ்சீவியும் சாதனை படைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil