பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவரான உமாபாரதி, அக்கட்சியின் பொதுச் செயலர் அனில்ராயை பொது இடத்தில் வைத்து அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மாநில அரசு விருந்தினர் இல்லத்தில் கட்சிப் பிரமுகர்கள், மக்கள் மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உமாபாரதியைப் பார்க்க வந்த அனில்ராய், காரில் இருந்து இறங்கியவுடன் அவரை உமாபாரதி அறைந்தார். எனினும் கட்சிப் பிரமுகர்கள் உமாபாரதியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றது போல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.
இதுகுறித்து உமாபாரதியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால்தான் தாம் அனில்ராயை அறைந்ததாகத் தெரிவித்தார். மேலும் அனில்ராய் எனது சகோதரைப் போன்றவர் என்றும், அவரை மீது அன்பு செலுத்தவோ, அடிக்கவோ தமக்கு உரிமை உள்ளது என்றும் உமாபாரதி அப்போது கூறினார்.
இதற்கிடையில், பாரதிய ஜனசக்தி கட்சியில் உள்ள அதிருப்தி உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் அனில்ராய் செயல்படுவதால், அவரை கண்டிக்கும் விதமாகப் பொதுஇடத்தில் வைத்து உமாபாரதி அவரை அறைந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர்.