Publish Date: Tue, 04 Nov 2008 (14:20 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (14:20 IST)
நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 2012ஆம் ஆண்டுக்குள் அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிவடைந்து விடும் என்றார்.
நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள், அரசு மேல் நிலைப்பள்ளிகள், பொது சுகாதார மையங்களில் 2012ஆம் ஆண்டுக்குள் அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்க அரசு இலக்கு கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
தற்போது உள்ள 7,000 செல்பேசி கோபுரங்கள் (டவர்கள்) மற்றும் எதிர்காலத்தில் அமைக்கப்பட உள்ள 11,000க்கும் மேற்பட்ட கோபுரங்கள் மூலம் இந்தியாவின் கிராமப்புறங்களில் செல்பேசி சேவையில் நல்ல மாற்றம் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.