Publish Date: Sat, 01 Nov 2008 (01:13 IST)
Updated Date: Sat, 01 Nov 2008 (01:13 IST)
பால்தாக்ரேயை சமாதானப்படுத்த ராஜ்தாக்ரே மீது மென்மையான போக்கை மத்திய அரசு கையாள்கிறது என்று குற்றம்சாற்றிய சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங், இதே நிலைமை நீடித்தால் வட இந்திய மக்களுக்காக நாங்கள் எதையும் செய்யத் தயார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மராட்டிய மாநிலத்தில் நிலவும் தற்போதைய நிலைமைக்கு காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியுமே காரணம் என்று குற்றம்சாற்றிய அமர்சிங், சிவசேனாவுடன் அங்கு கூட்டணி வைத்துள்ள இந்த கட்சிகளின் ஆட்சி பால்தாக்ரேயை சமாதானப்படுத்த ராஜ்தாக்ரே மீது மென்மையான போக்கை கையாள்கிறது என்றார்.
இதே நிலைமை நீடித்தால் வட இந்திய மக்களுக்காக நாங்கள் எதையும் செய்யத் தயார் என்று கூறிய அமர்சிங், ஆனால் இன்னும் காலம் இருக்கிறது என்றும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.
அதற்காக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் விலக்கிக் கொள்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமர்சிங் தெரிவித்தார்.
இதனிடையே, மராட்டிய மாநிலத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படும் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தால், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தான் தயாராக இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.