மராட்டியத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து அந்த மாநில முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அசாமில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சரவை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் பற்றியும் மராட்டியத்தில் வட இந்தியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் விளக்கம் அளித்தார்.
அப்போது, மராட்டியத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுவது பற்றி அந்த மாநில அரசை எச்சரித்து 3 தடவை அறிவுரை கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மராட்டியத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து மராட்டிய மாநில முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு, தான் கடுமையான வாசகங்கள் கொண்ட எச்சரிக்கை கடிதத்தை எழுதி இருப்பதாக தெரிவித்தார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவித்தன.