Publish Date: Mon, 27 Oct 2008 (16:33 IST)
Updated Date: Mon, 27 Oct 2008 (16:33 IST)
உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்தவாரம் அவர் கான்பூர் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது, அவருக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று புகார் எழுந்தது.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தர பிரதேச மாநில அரசிடம் விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கீது அனுப்பியது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையின் முடிவுக்கு பின்னர் மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் விக்ரம் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.