Publish Date: Fri, 24 Oct 2008 (17:28 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (17:27 IST)
நாடு முழுவதும் அஞ்சலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தங்க காசுக்கு விழாக்காலச் சலுகையாக 5 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
விழாக்கால சலுகையாக வழங்கப்படும் இந்த சிறப்புத் தள்ளுபடி திட்டம் இம்மாதம் கடைசி வரை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.
அண்மையில் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட அஞ்சல் அலுவலகம் மூலம் தங்க காசு விற்பனை செய்யும் இந்த முறை நாளை முதல் (அக்டோபர் 25) பஞ்சாப் மாநிலத்திலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா, ஜலந்தர் பகுதியில் உள்ள குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்களில் தங்க காசு விற்பனை செய்யப்படுகிறது.
அஞ்சல் அலுவலகங்களில் 24 காரட் தங்க காசு விற்பனை செய்யும் திட்டத்தை கடந்த 15ஆம் தேதி மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா துவக்கி வைத்தார்.
முதல்கட்டமாக தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. இந்த தங்க காசு அரை கிராம், 1 கிராம், 5, 8 கிராம் போன்ற எடைகளில் கிடைக்கும். இவை 24 காரட் தரத்துடன் கூடியவை.
சுவிட்சர்லாந்தின் 'வல்காம்பி' (Valcambi) நிறுவனத்தின் தரச்சான்றுடன் இந்த காசுகள் 'பேக்' செய்து முத்திரையிடப்பட்டிருக்கும். சர்வதேச தரம், தரமான பேக்கேஜ், போலி அபாயம் இல்லாதது, முறையான மதிப்பீட்டுச் சான்று ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
உலக தங்க கவுன்சில், ரிலையன்ஸ் மணி நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தை இந்திய அஞ்சல் துறை செயல்படுத் வருகிறது. சுவிட்சர்லாந்தில் தயாராகும் 24 காரட் தங்க காசுகளை ரிலையன்ஸ் நிறுவனம் சப்ளை செய்கிறது. இதை சந்தைப்படுத்த உலக தங்க கவுன்சில் உதவி செய்கிறது.
Webdunia
Publish Date: Fri, 24 Oct 2008 (17:28 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (17:27 IST)