Publish Date: Wed, 22 Oct 2008 (16:36 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (16:35 IST)
இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசு, தமிழர்களை அழித்தொழிக்க இரசாயன குண்டு வீசி வருகிறது என்று மாநிலங்களவையில் தி.மு.க.உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் ஒரு ஒழுங்கு பிரச்சனையை எழுப்பிய தி.மு.க. உறுப்பினர், தமிழர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க இரசாயன குண்டுகளை சிறிலங்க இராணுவம் வீசித் தாக்கி வருவதாகக் கூறினார்.
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திவரும் இந்த திட்டமிட்ட இனப்படுகொலையை ஒருமித்த குரலில் மாநிலங்களை கண்டிக்க வேண்டும் என்று கூறிய சிவா, அந்நாட்டு இராணுவ தாக்குதலில் சிக்கி பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ள தமிழர்களைக் காக்க மத்திய அரசு அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இப்பிரச்சனை குறித்துப் பேசிய அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் வி. மைத்ரேயன், இலங்கைப் பிரச்சனையைப் பொருத்தவரை அதில் இரண்டு கூறுகள் உள்ளதெனவும், அதில் ஒன்று, தமிழர்களின் சுய நிர்ணய உரிமை என்றும், மற்றொன்று விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் என்றும் கூறினார்.
அ.இ.அ.தி.மு.க. தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்கிறது என்றும், அதே நேரத்தில் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது என்றும் மைத்ரேயன் கூறினார்.
Webdunia
Publish Date: Wed, 22 Oct 2008 (16:36 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (16:35 IST)