Publish Date: Wed, 22 Oct 2008 (12:51 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (12:48 IST)
இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் ஒரு மைல்கல்லை ஏற்படுத்தியுள்ள சந்திராயன்-1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தினம் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் விண்வெளி வீரர்களுடன் சந்திரனுக்கு செயற்கைக் கோளை அனுப்ப ஏதுவாகும் என்றும் அவர் அனுப்பியிருக்கும் செய்தியில் கூறியுள்ளார்.
இந்த வெற்றிக்காக உழைத்த இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தமது பாராட்டுகளையும் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளித் திட்ட வரலாற்றில், ஆளில்லா சந்திராயன்-1 செலுத்தப்பட்டிருப்பதன் மூலம் சாதனையின் முதல்படியாகக் அமைந்துள்ளது என்று ஜப்பானில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மன்மோகன் சிங் இஸ்ரோ தலைவர் ஜி. மாதவன் நாயரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
சந்திராயன் -1ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதில் ஈடுபட்ட விண்வெளித் துறை விஞ்ஞானிகள் அனைவருக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் அப்போது கூறினார்.
இதனிடையே பிஎஸ்எல்வி சி-11 விண்கலம் சந்திராயன் -1 செயற்கைக்கோளை இன்று காலை 6.30 மணியளவில் வெற்றிகரமாக விண்வட்டப் பாதையில் செலுத்தியது.
இந்தியா தற்போது ஆளில்லா செயற்கைக் கோளை சந்திரனுக்கு அனுப்பியிருப்பதன் மூலம் மிகக் குறைந்த அளவு நாடுகளான 6 நாடுகளே இதுபோன்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் பட்டியலில் நாமும் இணைந்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நமது விஞ்ஞானிகள் இந்த சாதனையின் மூலம் உலக அளவில் இந்தியாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Webdunia
Publish Date: Wed, 22 Oct 2008 (12:51 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (12:48 IST)