Publish Date: Tue, 21 Oct 2008 (23:38 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (23:37 IST)
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்பாலில் உள்ள மணிப்பூர் அதிரடிக் காவல்படை வளாகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு, இரவு சுமார் 8 மணியளவில் வெடித்துச் சிதறியதாகவும், இதில் நிகழ்விடத்திலேயே 13 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதற்கட்ட தகவல்களின் படி, தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரும், அப்பகுதி மக்களும் பொதுபோக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டை வைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
Webdunia
Publish Date: Tue, 21 Oct 2008 (23:38 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (23:37 IST)