பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை அவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோ புறப்பட்டுச் சென்றார்.
ஜப்பானில் 22, 23 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மன்மோகன்சிங் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அந்நாட்டு பிரதமர் டாரோ ஆசோவையும் சந்தித்து பேசுகிறார்.
பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின்போது, இருநாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் மன்னர் அகிட்டோவையும் மன்மோகன்சிங் சந்தித்து பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து 23ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு ஜப்பானில் இருந்து புறப்படும் பிரதமர் மன்மோகன்சிங் சீன தலைநகர் பீஜிங் செல்கிறார். அங்கு 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் 45 நாடுகளைக் கொண்ட ஆசியா-ஐரோப்பா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பான், சீனா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 25ஆம் தேதி இரவு பீஜிங்கில் இருந்து டெல்லி திரும்புகிறார்.