Publish Date: Sat, 18 Oct 2008 (17:43 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
சென்னை: தமிழகத்தின் தொழில் வளர்ச்சி வேகமாக முன்னேறி வருவதால் அதற்கேற்ப சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களின் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சென்னையில், எண்ணூர் துறைமுக கழகமும், நிசான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும் எண்ணூர் துறைமுகம் வாயிலாக கார்கள் ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் இன்று கையெழுத்திட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய டி.ஆர். பாலு, நிசான் நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை ஒரகடத்தில் செயல்படத் துவங்கியவுடனே கார் ஏற்றுமதி துவங்கும். 2010-11ஆம் ஆண்டில் நிசான் நிறுவனம் 90,000 கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
இது 2013-14ஆம் ஆண்டில் 1,80,000-ஐ எட்டும். அந்த ஆண்டுக்குள் எண்ணூர் துறைமுகம் தேவைப்படும் துறைமுக வசதிகளை நிறைவேற்றியிருக்கும். இதற்காக இத்துறைமுகம் ரூ.110 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும் என்று டி.ஆர்.பாலு கூறினார்.