டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் விளையாடிய இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், மேற்கு இந்திய தீவு அணியின் முன்னாள் வீரர் லாராவின் சாதனையை முறியடித்து, டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார்.
சச்சின் டெண்டுல்கருக்கு, குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில், "டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையின் மூலம் கிரிக்கெட்டில் ஒரு புதிய சிகரத்தை எட்டியிருக்கிறீர்கள். இந்த சாதனையை அறிந்து மகிழ்கிறேன், பெருமிதப்படுகிறேன். இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.