Publish Date: Fri, 17 Oct 2008 (16:38 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதி தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார். இந்த படுகொலை தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் பி.ஆர். ரவிச்சந்திரன்.
இவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தண்டனை காலம் முடிவடைந்தும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதற்காக விடுதலை செய்யக்கோரும் மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்காமல் உள்ளது என்று ரவிச்சந்திரன் தரப்பில் வாதிக்கப்பட்டது.
இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.
Webdunia
Publish Date: Fri, 17 Oct 2008 (16:38 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)