நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி சந்தித்துப் பேசினார்.
பா.ஜ.கட்சியின் பிரதமர் வேட்பாளரான அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் ஒரு நிமிடத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி போன்ற மூத்த தலைவர்கள் சோனியாவின் அருகில் இல்லை. இந்த சந்திப்பிற்கு சில நிமிடங்களுக்குப் பிறகே அவர்கள் வந்தனர்.
முன்னதாக, அத்வானி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா உள்பட பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்றத்தில் இன்று பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்த்த வேளையில், அத்வானியின் இந்த திடீர் சந்திப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் எழுதிய 'எனது நாடு, எனது வாழ்க்கை' ('My Country, My Life' )என்ற புத்தகத்தை சோனியாவின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று அத்வானி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.