Publish Date: Thu, 16 Oct 2008 (09:46 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில், இலங்கைத் தமிழர் பிரச்னை, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட பல பிரச்சனைகள் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணு ஒத்துழைப்பு ஒப்பந்த பிரச்சனையில் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை இடதுசாரிகள் கடந்த ஜூலை மாதம் விலக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி பெற்றது. அதன் பின்னர், முதல் முறையாக நாளை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டம், அடுத்த மாதம் 24ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் எழுப்ப உள்ள பிரச்சனைகள் பற்றி முடிவு செய்ய, கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர்கள், ''அணு சச்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில் பிரதமரும், அயலுறவு அமைச்சரும் தவறான தகவல்களைத் தந்து மக்களை திசை திருப்புகின்றனர். அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில் உள்ள உண்மைகளை மக்களுக்குத் தெரியவைப்போம். விலைவாசி உயர்வு, சிறுபான்மையினர் மீது தாக்குதல் உட்பட பல பிரச்சனைகளை எழுப்புவோம்'' என்றனர்.
விலைவாசி உயர்வு, ராமர் பால விவகாரம், தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப பா.ஜ. கூட்டணி முடிவு செய்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை இராணுவம் உடனடியாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். எனவே, இலங்கைப் பிரச்சனையும் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், ''இந்த தொடரில் 71 சட்ட மசோதாக்கள், 2 நிதி மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 16 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும்'' என்றார்.
Webdunia
Publish Date: Thu, 16 Oct 2008 (09:46 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)