Publish Date: Tue, 14 Oct 2008 (21:47 IST)
Updated Date: Tue, 14 Oct 2008 (18:34 IST)
இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு 2007-08ஆம் ஆண்டில் 162.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.6.56 லட்சம் கோடி) அளவுக்கு பொருடகள் ஏற்றுமதி செய்யப்பட்டு நிர்ணயித்த இலக்கையும் தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2008ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் நாட்டின் ஏற்றுமதி குறித்த அறிக்கையை வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் பிரிவு தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
இதில், 2007-08ஆம் ஆண்டில் 162.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. 160 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டத்தான் இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய ஆண்டில் நடந்த ஏற்றுமதியைவிட இது 29.02 விழுக்காடு அதிகம். இந்திய மதிப்பில் ரூ.5.72 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.6.56 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இது 14.71 விழுக்காடு அதிகம்.
இந்த ஏற்றுமதியில் பொறியியல் தொடர்பான சரக்குகள், பெட்ரோலியப் பொருட்கள், விவசாயப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாயம் மற்றும் அது தொடர்பான பொருட்கள் 55.51 விழுக்காடும் பெட்ரோலிய பொருட்கள் 51.97 விழுக்காடும் , தாதுக்கள், கனிமப் பொருட்கள் 30.34 விழுக்காடும் பொறியியல் துறை தொடர்பான சரக்குகள் 27.34 விழுக்காடும் , ரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் 23.27 விழுக்காடும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததை அடுத்து 2006-07ஆம் ஆண்டில் ஜவுளி, கைவினைப் பொருள், விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் இத்தகைய பொருள் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Tue, 14 Oct 2008 (21:47 IST)
Updated Date: Tue, 14 Oct 2008 (18:34 IST)