ஜம்மு- காஷ்மீரில் சீனாப் நதியின் மீது இந்தியா கட்டியுள்ள பக்ளிஹார் அணை, பாகிஸ்தானுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள சிந்து நதி நீர் பங்கீட்டு உடன்படிக்கைக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பக்ளிஹார் அணையில் அமைக்கப்பட்டுள்ள 450 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள மின் நிலையத்தைத் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்த பிறகு பேசிய பிரதமர், இந்தத் திட்டம் தொடர்பாக உலக வங்கியிடம் அதிருப்தி தெரிவித்துள்ள பாகிஸ்தானின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், பாகிஸ்தானுடனான நட்பையும் ஒத்துழைப்பையும் புதுப்பித்துக்கொள்வதற்கு இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் கூறிய பிரதமர், "ஒருவருக்கொருவர் உதவிக் கரங்களை நீட்டுவது எப்படி என்று கற்றுக்கொள்வது இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு மக்களின் கடமை" என்றார்.
இந்தத் திட்டத்தின் குறிக்கோளை முழுமையாக எட்ட இந்தியாவுடன் இணைந்து செயல்பட வருமாறு பாகிஸ்தானை தான் அழைக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
ரூ.5,500 கோடி மதிப்பிலான பக்ளிஹார் மின் நிலையம், ஜம்மு- காஷ்மீர் மாநில அரசிற்கு ஆண்டிற்கு ரூ.900 கோடி வருவாய் ஈட்டித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்ளிஹார் நீர் மின் நிலைய அணையில் இந்தியா தண்ணீர் தோக்கிவருவதால், சீனாப் நதியில் தங்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து பெரும் பாதி்ப்பிற்குள்ளாகி வருகிறுது என்று கூறியுள்ள பாகிஸ்தான், தங்களுக்கு நொடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இது இருநாடுகளுக்கு இடையிலான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள பாகிஸ்தான், இதுகுறித்து மீண்டும் உலக வங்கியை அணுகவும் முடிவு செய்துள்ளது.