Publish Date: Tue, 07 Oct 2008 (18:34 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (18:33 IST)
மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் இது குறித்த தகவல்கள், மற்ற சேவைகள் கிராமப்புற மக்களை உடனுக்குடன் சென்றடையும் நோக்கில் நாடு முழுவதும் ஒரு லட்சம் பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மையங்கள் 6 லட்சம் கிராமங்களை உள்ளடக்கி அமைக்கப்படுகிறது. கணினி, வயர்லெஸ் இணைப்பு, பிரின்டர், ஸ்கேனர், யு.பி.எஸ், டெலிமெடிசின் வசதி, புரொஜக்டர் ஆகியவை இந்த மையங்களில் இருக்கும். மிகவும் பின்தங்கிய, கிராமப் பகுதிகளுக்கும் அனைத்து தகவல்கள் மற்றும் சேவைகள் இந்த மையங்கள் மூலம் கிடைக்கும்.
தற்போது நாடு முழுவதும் 18,000 பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களில் முழுவதுமாக அமைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து பொது சேவை மையங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் செயல்படத் தொடங்கும்.
அரசு, தனியார் இணைந்து இதற்கென பணிகளை மேற்கொள்கின்றன. இதற்காக 4 ஆண்டுகளில் ரூ.5,742 கோடி ஒதுக்கப்படும். மத்திய அரசு ரூ.856 கோடி, மாநில அரசுகள் ரூ.793 கோடி வழங்கும். மீதி தொகை தனியார் நிறுவனங்கள் மூலம் பெறப்படும்.
Webdunia
Publish Date: Tue, 07 Oct 2008 (18:34 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (18:33 IST)