Publish Date: Sat, 04 Oct 2008 (15:31 IST)
Updated Date: Sat, 04 Oct 2008 (15:31 IST)
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பதினோராவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள வட்டாரம் ஒவ்வொன்றிலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி அமைக்கும் திட்டத்தை மாற்றியமைப்பதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்திற்காக ரூ.2,000 கோடி செலவழிக்கவும் இக்குழு அனுமதித்துள்ளது. திட்டச் செலவில் மத்திய அரசு 90 சதவிகிதமும், மாநில அரசுகள் 10 சதவிகிதமும் பகிர்ந்து கொள்ளவுள்ளன.
நமது நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள அனைத்து வட்டாரங்களிலும், மாநில அரசுகள் வாயிலாக 3,500 தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு, மாற்றியமைக்கப்பட்ட திட்டம், வழிவகுத்துள்ளது.