Publish Date: Fri, 03 Oct 2008 (20:00 IST)
Updated Date: Fri, 03 Oct 2008 (20:00 IST)
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நிறுவ திட்டமிடப்பட்டிருந்து தங்களது ‘நானோ’ குறைந்த விலை கார் திட்டத்தை விலக்கிக் கொள்வதாக டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார்.
கொல்கட்டாவில் இன்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரத்தன் டாடா, “சிங்கூரில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை” என்று கூறினார்.
சிங்கூரில் இருந்து வெளியேறினாலும், திட்டமிட்ட காலத்தில் தங்களுடைய ஒரு லட்சம் ரூபாய் நானோ கார் நிச்சயம் வெளிவரும் என்று ரத்தன் டாடா உறுதியளித்துள்ளார்.
தங்களது திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திவரும் போராட்டமே இம்முடிவிற்கு காரணம் என்று கூறிய ரத்தன் டாடா, தங்களது நிறுவனத்தின் தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், உபரிகள் வழங்குவோர் ஆகியோரின் நலன், பாதுகாப்புக் கருதி சிங்கூரில் இருந்து வெளியேறுவதாக கூறினார்.
நானோ கார் திட்டத்திற்கான தொழிற்சாலையை அமைக்க இரண்டு, மூன்று மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும், எங்கு அது நிறுவப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரத்தன் டாடா கூறினார்.
Webdunia
Publish Date: Fri, 03 Oct 2008 (20:00 IST)
Updated Date: Fri, 03 Oct 2008 (20:00 IST)