Publish Date: Tue, 30 Sep 2008 (18:02 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (18:02 IST)
நமது நாட்டில் கடந்த 4 மாதங்களில் 44 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. இதில் 152 பேர் பலியாகியுள்ளதுடன் 445 பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பொது மக்கள் அரசிற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், நாம் அனைவரும் தோளோடு தோள் சேர்த்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடினால் சமூக விரோத செயல்களை தடுத்து விடலாம் என்றார்.
கடந்த மே 13-இல் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து வருகின்றன. கடந்த 140 நாள்களில் மட்டும் 44 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. இவற்றில் 152 பேர் பலியாகியுள்ளதுடன், 445 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்த மதுக்கர் குப்தா, இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமான பயங்கரவாதிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அரசு முழு முயற்சியுடன் பாடுபடும் என்றும் உறுதியளித்தார்.