Publish Date: Tue, 30 Sep 2008 (10:11 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (10:11 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலுள்ள சாமுண்டா தேவி மலைக்கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 72 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சாமுண்டா கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 72 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களின் உடல்கள் மகாத்மா காந்தி மருத்துவமனைக்கும், மதுராதாஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக, மண்டல காவல்துறை ஆணையர் கிரன் சோனி குப்தா தெரிவித்தார்.
படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜோத்பூரிலுள்ள சாமூண்டா தேவி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதைக் காணவரும் பக்தர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.
இக்கோவிலில் இன்று காலை நிகழ்ந்த திடீர் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவராத நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.