Publish Date: Mon, 29 Sep 2008 (17:15 IST)
Updated Date: Mon, 29 Sep 2008 (16:59 IST)
வழக்கறிஞரிடம் லஞசம் வாங்கிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமைத்துள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவின் முன்பு பெண் நீதிபதி நிர்மல்ஜித் கெளர் ஆஜரானார்.
ஆகஸ்ட் 13-ஆம் தேதி, ஹரியானா மாநில முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சஞ்சீவ் பன்சல் என்பவரது எழுத்தர் பெண் நீதிபதி நிர்மல்ஜித் கௌரிடம் ரூ.15 லட்சம் லஞ்சமாக கொடுத்தார் என்று புகார் எழுந்தது.
நீதிபதி நிர்மல்ஜித் கௌரின் ஊழியர் அளித்துள்ள இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்துவதற்காக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அமைத்துள்ள 3 நீதிபதிகள் கொண்ட குழு இன்று விசாரணை நடத்தியது.
அப்போது ஆஜரான நீதிபதி நிர்மல்ஜித் கௌர், பணம் தன்னிடம் "தவறாக" தரப்பட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து விசாரணைக்கு தேவையான தகவல்களை அளிக்குமாறு நீதிபதி நிர்மல்ஜித் கௌரிடம் விசாரணைக் குழு கோரியுள்ளது.
இந்த பரபரப்பான லஞ்சப் புகார் தொடர்பாக முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பன்சல், அவரது எழுத்தர் பிரகாஷ் ராம், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நிர்மல் சிங், தொழிலதிபர் ரவிந்தர் சிங் பாஸின், சொத்து விற்பனை வர்த்தகத்தில் உள்ள ராஜீவ் குப்தா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மத்திய புலனாய்வுக் கழகமும், சண்டிகார் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டபோது, மற்றொரு நீதிபதியான நிர்மல் யாதவ் என்பவரது பெயர் அடிபட்டது. இதனால் அவரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள 3 நீதிபதிகள் நீதி விசாரணைக் குழுவின் தலைவராக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் லக்ஷ்மண் கோகலே நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகூர் ஆகியோர் மற்ற இரு உறுப்பினர்கள் ஆவார்கள்.
இந்த வழக்கில் உயர்மட்ட நீதித்துறையினர் தொடர்பு கொண்டிருப்பதாலிந்த நீதி விசாரணைக் குழுவினர் இந்தப் புகாரை தனிப்பட்ட முறையில் விசாரிக்கவுள்ளனர்.
Webdunia
Publish Date: Mon, 29 Sep 2008 (17:15 IST)
Updated Date: Mon, 29 Sep 2008 (16:59 IST)