Publish Date: Thu, 25 Sep 2008 (16:44 IST)
Updated Date: Thu, 25 Sep 2008 (16:44 IST)
சீனாவில் இருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு 3 மாதத்துக்கு தடை வித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின், அயலுறவு வர்த்தக பொது இயக்குனரகம் (DGFT) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சீனாவில் இருந்து பால் உள்பட பால் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி செய்ய 3 மாதத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவு அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடையுத்தரவு அமலில் உள்ள இந்த காலத்தில் சீனாவில் இருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வது அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், சீனாவில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை உட்கொண்ட 53,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்படைந்தனர். இதையடுத்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் சீனாவில் இருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.