Publish Date: Wed, 24 Sep 2008 (20:57 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (20:57 IST)
செல்போன், தொலைபேசி எண்ணிக்கையை அதிகரித்தல், சேவையை மேம்படுத்த புதிய கருவிகள் வாங்குதல் ஆகிய வகையில் 73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீடு பெறப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா கூறினார்.
இந்திய தொலைத் தொடர்புத் துறை குறித்த 14-வது சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தொலைபேசி, செல்போன் நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், சேவை வழங்குவோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா பேசியதாவது :
கிராமப்புற, பின் தங்கிய பகுதிகளில் வயர்லெஸ் தொலைபேசி சேவை வழங்கும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது கிராமப்புறங்களில் 8.8 கோடி தொலைபேசி இணைப்புகள் உள்ளன. மொத்த மக்கள் தொகையில் இது 11 சதவீதம். 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்துக்குள் இந்த எண்ணிக்கை 20 கோடியாக உயர்த்தப்படும். அப்போது தொலைபேசி இணைப்பு பெற்றவர்கள் சதவீதம் 25 சதவீதமாக இருக்கும்.
போன் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 2012-ம் ஆண்டுக்குள் 60 கோடியாக உயர்த்தப்படும். இதற்கேற்ப நவீன தொழில்நுட்பங்கள், கருவிகள் வாங்குவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் 73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலான தொகை அன்னிய நேரடி முதலீடாக பெறப்படும். இதில் செல்போன் வளர்ச்சிக்கு அதிகளவு ஒதுக்கப்படும்.
2005-ம் ஆண்டு மார்ச்சில் அகண்ட அலைவரிசை இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1.8 லட்சம். அது தற்போது 40 லட்சமாக உயர்ந்துள்ளது. இணையதளம், அகண்ட அலைவரிசை இணைப்பு பெற்றவர் எண்ணிக்கை 2010-ம் ஆண்டுக்குள் முறையே 4 கோடி, 2 கோடியாக அதிகரிக்கும் என்றார் அமைச்சர் இராசா.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் ஒரு லட்சம் தொலைபேசிகள் மட்டும் இருந்தன. தற்போது 34.4 கோடி இணைப்புகள் உள்ளன. இந்த வகையில் உலகிலேயே 3-வது இடத்திலும் ஆசிய அளவில் 2-வது இடத்திலும் இந்தியா உள்ளது. செல்போன் இணைப்பு அடிப்படையில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே 2-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
1986-87-ம் ஆண்டில் 1 சதவீதத்துக்கும் குறைவாக மக்களே போன் இணைப்பு பெற்றிருந்தனர். இது தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொது மாதமும் 80 லட்சம் புதிய இணைப்புகள் வழங்கப்படுகின்றன. மொத்த போன் இணைப்புகளின் எண்ணிக்கையை 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
1986-87-ல் வயர்லெஸ் போனே இந்தியாவில் இல்லை. தற்போது மொத்த போன்களின் எண்ணிக்கையில் 88 சதவீதம் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன.
அரசின் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் திட்டங்களால் தொலை தொடர்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்துள்ளது. மொத்த போன் இணைப்புகளில் தனியாரின் பங்கு தற்போது 77 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
Webdunia
Publish Date: Wed, 24 Sep 2008 (20:57 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (20:57 IST)