Publish Date: Wed, 24 Sep 2008 (20:45 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (20:44 IST)
இந்தியாவில் 1.40 லட்சம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் மின்சார உற்பத்தி இரட்டிப்பாகும் என்று மத்திய மின்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
இது குறித்து அவர், நேபாள தலைநகர் காத்மாண்டில் நடந்த மின்துறை மாநாட்டில் பேசுகையில், "இந்தியாவில் நீர் மின் நிலையம், அனல் மின் நிலையங்கள் மூலமாக பெறப்படும் மின்சாரம் 25:75 என்ற அளவில் உள்ளது. இதை 40:60 என்ற அளவுக்கு உயர்த்தும் வகையில் இந்தியாவில் கூடுதல் நீர் மின் திட்டங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்.
தற்போது நீர் மின் நிலையங்கள் மூலமாக 35 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மேலும் 50 ஆயிரம் மெகாவாட் கிடைக்கும் வகையில் 2025-க்குள் நீர் மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
1.40 லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் கடந்த 60 ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1.40 லட்சம் மெகாவாட் மின்சாரம் தரும் மின் திட்டங்கள் அடுத்த 10 ஆண்டில் அமைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் மின்சார உற்பத்தி பத்தே ஆண்டில் இரட்டிப்பாகும்" என்றார்.
மேலும், "நேபாளத்திடமிருந்து மின்சாரம் பெற்றுக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இதனால் இரு நாடுகளிடையே வர்த்தக உறவு மேம்படும்.
பூடானில் 10 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கும் பணிகள் இந்தியாவின் உதவியுடன் நடந்து வருகின்றன. 2020-க்குள் இது நிறைவடையும். இந்த மின்சாரம் இந்தியாவுக்கு விற்கப்படும். மியான்மரில் நீர் மின் திட்டம் அமைக்கவும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இலங்கையின் திரிகோணமலையில் 500 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. வங்கதேசத்தில் இருந்து மின்சாரம் பெறுவது குறித்து கடந்த ஆண்டில் தொழில்நுட்ப ஆய்வுகள் நடத்தப்பட்டன" என்றார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
Webdunia
Publish Date: Wed, 24 Sep 2008 (20:45 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (20:44 IST)