Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுரேனியம் எரிபொருள் பெற பிரான்ஸூடன் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்: பிரணாப்!

யுரேனியம் எரிபொருள் பெற பிரான்ஸூடன் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்: பிரணாப்!
, திங்கள், 22 செப்டம்பர் 2008 (17:28 IST)
நமது நாட்டின் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளைப் பெறுவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா பேசி முடித்துள்ள ஒப்பந்தம், அடுத்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் அந்நாட்டிற்கு செல்லும் போது கையெழுத்தாகலாம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கொல்கட்டாவில், ‘இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு - அதன் எதிர்காலத் தாக்கம’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய பிரணாப் முகர்ஜி, இதேபோன்று, எரிபொருள் மற்றும் அணு சக்தி தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தம், ரஷ்ய அதிபர் திமித்ரி மெட்விடேவ் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வரும்போது கையெழுத்தாகலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் வரும் 25ஆம் தேதிக்குள் ஒப்புதல் வழங்கிவிடும் என்று தான் நம்புவதாகவும், அப்படி ஒப்புதல் கிடைக்கத் தாமதமானாலும், மற்ற நாடுகளுடன் எரிபொருள் பெற ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு எந்தத் தடையும் இல்லையென்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

“பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் நாம் செய்துக்கொண்ட தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் மற்ற நாடுகளுடன் அணு சக்தி வணிகத்தில் ஈடுபட நமக்கு கிடைத்த கடவுச் சீட்டு, இப்பொழுது நாம் எதிர்பார்ப்பது விசா மட்டுமே” என்று பிரணாப் கூறினார்.

10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், வரும் 25ஆம் தேதி அமெரிக்க அதிபர் புஷ்-யை சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்க பயணத்திற்குப் பிறகு பிரான்ஸ் செல்கிறார் மன்மோகன் சிங்.

Share this Story:

Follow Webdunia tamil