Publish Date: Sat, 20 Sep 2008 (15:44 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (15:43 IST)
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ஜெய்ப்பூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவன் உள்பட தடைசெய்யப்பட்ட சிமி இயக்க தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் மாநில காவல் துறையினர் சேர்ந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஜபல்பூர் என்னுமிடத்தில் இருந்து முகமது அலி என்ற தீவிரவாதியும், நரசிங்புர் என்னுமிடத்தில் இருந்து காலித் என்ற விக்ரம் நேய் என்பவனும் கைது செய்யப்பட்டனர்.
ஜெய்ப்பூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஷாபாஷ் ஹூசைன் என்பவனிடம் நடத்திய விசாரணையின் போது அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் இந்த 2 தீவிரவாதிகளையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்களில் முகமது அலி, சிமி இயக்கத்துக்காக நிதி உருவாக்கும் பணியில் பயன்படுத்தப்பட்டான். மற்றொருவனான காலித், சோட்டா ராஜன் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தவன்.
பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த காலித் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் அளிக்கப்படும் என்று உஜ்ஜய்ன் காவல் துறையினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.