கர்நாடகத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு கூறிவரும் வேளையில், பெங்களூரு, மங்களூர் ஆகிய நகரங்களில் இரண்டு தேவாலயங்களின் மீது தாக்குதல் நடந்துள்ளன.
மங்களூரில் மூர்ஜே என்ற இடத்தில் பந்த்வால்- பூஞ்சல்கட்டே சாலையில் உள்ள தேவாலயத்தின் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டு உள்ள குழந்தை ஏசு சிலையில் கண்ணாடிச் சுவர்கள் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட தேவாலயத்திற்கு இன்று அதிகாலை மோட்டர் சைக்கிளில் வந்த சில மர்ம நபர்கள் குழந்தை ஏசு சிலையைத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். ஆனால், தேவாலயத்திற்குப் பாதுகாப்பாக உள்ள இளைஞர்கள் சிலர் ஓடி வருவதைக் கண்டதும் மர்ம இளைஞர்கள் தப்பியோடி விட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெங்களூருவின் புற நகர்ப் பகுதியான சிக்கபள்ளபூரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் மன்ச்சன்ஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள தேவாலயத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெந்தோகோஸ்தே சபைக்குச் சொந்தமான அந்தத் தேவாலயத்தில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வழிபாடு நடக்கும் என்றும், மற்ற நாட்களில் தேவாலம் மூடப்பட்டு இருக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுமாறு அரசியல் சட்டப் பிரிவு 355இன் கீழ் மத்திய அரசு கடும் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நடந்துள்ள இந்தத் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த இரண்டு தாக்குதல்களுடன் சேர்த்து கர்நாடகத்தில் தாக்கப்பட்டுள்ள தேவாலயங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்பு நடந்துள்ள 18 தேவாலயங்களின் மீதான தாக்குதல்கள் குறித்தும் நீதி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.