Publish Date: Thu, 18 Sep 2008 (20:28 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க உளவுத் துறை (Intelligence Bureau - IB) பலப்படுத்தப்படும் என்று கூறியுள்ள மத்திய அரசு, அதற்கென்று உளவுத் துறையில் ஆராய்ச்சி-தொழில்நுட்பப் பிரிவு ஒன்று தனியாகத் துவக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தகவல்-ஒலி,ஒளிபரப்பு அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (பொடா) மீண்டும் கொண்டுவரப்போவதில்லை என்றும், அப்படிப்பட்டச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது, காட்டுமிராண்டித்தனமானது என்று கூறினார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க நிர்வாக சீர்திருத்த ஆணையம் அளித்த பரிந்துரைகளை ஆராய உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது என்றும் தாஸ் முன்ஷி கூறினார்.
“நிர்வாக சீர்திருத்த ஆணையம் அளித்த பரிந்துரைகளில், பயங்கரவாதத்தை ஒடுக்க தேச அளவில் தனித்த புலனாய்வு அமைப்பை ஏற்படுத்துவது பற்றியும் இந்தக் குழு ஆராயும்” என்று தாஸ் முன்ஷி கூறினார்.
பஜ்ரங் தள் அமைப்பின் நடவடிக்கைகளை அரசு கவனமாக ஆராய்ந்து வருவதாகவும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய தாஸ் முன்ஷி, அது பற்றி அரசு பேசத் தயாராக உள்ளது என்று கூறினார்.
தலைநகர் டெல்லியின் பாதுகாப்பை பலப்படுத்த அம்மாநில காவல் துறை விடுத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 7,612 புதிய பணியிடங்கள் உருவாக்கவும், 130 பாதுகாப்பு வாகனங்களை வாங்கவும், மேலும் 58 இடங்களில் எல்லைச் சோதனைச் சாவடிகளை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலர் மதுகர் குப்தா கூறினார்.