Publish Date: Sun, 14 Sep 2008 (14:02 IST)
Updated Date: Sun, 14 Sep 2008 (13:54 IST)
சூப்பர்சானிக் வேகத்தில் வரும் விமானங்களையும், அதிவேக விண் இலக்குகளையும் தாக்கி அழிக்கவல்ல 'அஸ்த்ரா' ஏவுகணையை தொடர்ந்து 2-வது நாளாக இந்தியா இன்றும் வெற்றிகரமாக சோதித்துள்ளது.
போர் விமானங்களில் பொருத்திச் சென்று கண்ணிற்கு புலப்படாத தூரத்தில் மின்னல் வேகத்தில் வரும் விமானங்களையும், ஏவுகணைகளையும் தாக்கி அழிக்கவல்ல இந்த ஏவுகணை, ஒரிசா மாநிலம் பாலாசூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து இன்று காலை 11.47 மணிக்கு ஏவப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது மிகச் சரியாக சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தது.
திட எரிபொருளுடன் இயங்கக்கூடிய இந்த அஸ்த்ரா ஏவுகணை, 25 கி.மீ. மற்றும் 40 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை (விமானம் மற்றும் ஏவுகணைகள்) துல்லியமாக இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
உலக அளவில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள விண்ணிலிருந்து விண் இலக்குகளை தாக்கும் ஏவுகணை வகைகளில் இது அதிநுட்பமானது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) கூறியுள்ளது.
இதேபால், ஒரிசா மாநிலம் பாலாசூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து நேற்றும் மதியம் 12.05 மணிக்கு 'அஸ்த்ரா' ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Sun, 14 Sep 2008 (14:02 IST)
Updated Date: Sun, 14 Sep 2008 (13:54 IST)