Publish Date: Sat, 13 Sep 2008 (12:22 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (12:21 IST)
புது டெல்லி: 2009ஆம் ஆண்டுக்குள் புதிதாக கண்டறியப்பட்டுள்ள மேலும் 50,000 கிராமங்களுக்கு பொது தொலைபேசி இணைப்பு வழங்கப்படுவதற்கான பணி தொடங்கியது.
இந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50,000 கிராமங்களுக்கு பொது தொலைபேசி வசதியை அளிக்கும் திட்டத்தை தொடங்குமாறு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தொலைத் தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, புதிதாக கண்டறியப்பட்ட கிராமங்கள் உள்பட இந்த 50,000 கிராமங்களுக்கு பொது தொலைபேசி இணைப்பு வழங்கப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் பொது தொலைபேசி இணைப்பு அடுத்த ஆண்டு இறுதிக்குள் அளிக்கப்படும். இதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களும் பொது தொலைபேசி வசதியைப் பெறும்.
மக்கள் தொகை 100 பேருக்கும் குறைவாக உள்ள கிராமங்கள், பல்வேறு காரணங்களால் முன்னதாக இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன.
பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு வசதியற்ற 66,822 கிராமங்களில் மானியக் கட்டணத்தில் பொதுத் தொலைபேசி வசதியை அளிக்கும் திட்டத்தை அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றது.
இதில் 54,700 கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள கிராமங்களுக்கு நடப்பாண்டு இறுதிக்குள் தொலைபேசி வசதி வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் 100க்கும் குறைவான மக்கள்தொகை உள்ள கிராமங்கள், அடர்ந்த காடுகளில் உள்ள கிராமங்கள் ஆகியவை தவிர அனைத்து கிராமங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சுமார் 5,000 தொலைதூர கிராமங்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராம பொதுதொலைபேசி இணைப்பு தரப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 5.50 லட்சம் கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு வழங்கியுள்ளது. 30,500 கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை (Broadband) இணைப்பை தந்துள்ளது.
Webdunia
Publish Date: Sat, 13 Sep 2008 (12:22 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (12:21 IST)