டெல்லி, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் இன்று காலை மித நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.8 ஆக பதிவாகியுள்ளது.
இன்று காலை 11.18 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் நீடித்தது. இதனால் குடியிருப்புகள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்தப்படி தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடிவந்தனர்.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏதும் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை அறிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தது.
வடக்கே பூமத்திய ரேகையில் 36.7 டிகிரி கோணத்திலும், கிழக்கே தீர்க்க ரேகையில் 70.68 டிகிரி கோணத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.