Publish Date: Mon, 25 Aug 2008 (13:10 IST)
Updated Date: Mon, 25 Aug 2008 (13:10 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஜம்முவின் பூஞ்ச் நகரில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல்கோட் வரை இயக்கப்பட்ட பேருந்து, ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருநாட்டு எல்லைப் பகுதிக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று (திங்கள்) ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்த மூத்த அதிகாரி ஒருவர், எனினும் இன்னும் 2 வாரத்திற்கு பின்னர் மீண்டும் இந்த போக்குவரத்து துவங்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.
கடந்த 2006 ஜூன் 20ஆம் தேதி துவங்கப்பட்ட பூஞ்ச்-ராவல்கோட் பேருந்து சேவையை, இரு நாட்டு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ராஜவ்ரி, பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 50 ஆயிரம் குடும்பங்கள் உட்பட ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.