Publish Date: Sun, 24 Aug 2008 (12:27 IST)
Updated Date: Sun, 24 Aug 2008 (12:27 IST)
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து மதுகோடா திடீரென விலகியுள்ளார். இதையடுத்து புதிய அரசு அமைக்க உரிமை கோரப்போவதாக சிபுசோரன் அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று டெல்லி சென்ற மதுகோடா, அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும்படி சோனியா அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தலைநகர் ராஞ்சி திரும்பியதும், ஆளுனரை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை மதுகோடா அளித்தார்.
இதற்கிடையே மதுகோடாவின் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய அரசு அமைக்க உரிமை கோரவிருப்பதாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ராஞ்சி நகருக்கு திரும்பிய அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, "வரும் 25-ஆம் தேதிக்கு பிறகு மாநில ஆளுநரை சந்தித்து அரசு அமைக்க அழைக்கும்படி உரிமை கோருவேன்" என்றார்.