Publish Date: Sat, 23 Aug 2008 (15:45 IST)
Updated Date: Sat, 23 Aug 2008 (15:44 IST)
அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநில அரசிற்கும் ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அமைப்பிற்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சின் முதல் சுற்று எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் முடிந்தது.
இறுதி முடிவை எடுப்பதற்காக இருதரப்புப் பிரதிநிதிகளும் இன்று மதியம் மீண்டும் கூடிப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஜம்மு- காஷ்மீர் அரசின் சார்பில் ஆளுநர் என்.என்.வோரா அமைத்துள்ள குழுவுடனான பேச்சு சுமூகமாக நடந்தது. அரசு தரப்பில் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அவற்றை நாங்கள் பரிசீலிப்போம்." என்று ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதியின் உறுப்பினர்களில் ஒருவரான பிரிகேடியர் சச்செட் சிங் தெரிவித்தார்.
அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், இன்று மதியம் நடப்பதாகவுள்ள அடுத்த சுற்றுப் பேச்சில் இறுதித் தீர்வு எட்டப்படும் என்று தான் நம்புவதாகவும் சச்செட் சிங் கூறினார்.
ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதியின் சார்பில் திலக் ராஜ் சர்மா, பவான் கோஹ்லி, நரீந்தர் சிங், பிரிகேடியர் சச்செட் சிங் ஆகியோரும், அரசு தரப்பில் எஸ்.எஸ்.பெலோரியா, ஜம்மு பல்கலைக்கழகத் துணை வேந்தர் அமிதாப் மாட்டூ, ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி.சர்மா, பி.பி.வியாஸ் ஆகியோரும் பேச்சில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக இரண்டு தரப்பிற்கும் இடையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி நடந்த முதல்கட்டப் பேச்சு எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் முறிந்தது.