இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகளிடம் வலியுறுத்தி வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியைத் துவக்கி வைத்த அவர், இந்தியாவில் 23 லட்சம் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 10 சதவீதத்தினர் எய்ட்ஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளவர்கள். இவர்களிடையே எய்ட்ஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டப் பிரிவு 377 முட்டுக்கட்டையாக உள்ளது. இதனை நீக்கினால், எய்ட்ஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ள முடியும்" என்றார்.
மேலும், "18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் பலன் தருகிறது. எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் துவங்கியுள்ளது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை புதிய தளங்களுக்கு அமைச்சகம் விரிவுபடுத்தியுள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களும் இந்தியாவில் பெரும் வெற்றி பெற்றுள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.