Publish Date: Wed, 20 Aug 2008 (20:28 IST)
Updated Date: Wed, 20 Aug 2008 (20:28 IST)
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான ஃபிரிஸ்டைல் 66 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் சுஷில் குமாருக்கு, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ரயில்வேத் துறையில் தலைமை பயணச்சீட்டு பரிசோதகராகப் பணியாற்றி வரும் சுஷில் குமாருக்கு, உதவி வர்த்தக மேலாளராக பதவி உயர்வு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள அமைச்சர், அவருக்கு ரூ.55 லட்சம் பரிசுப் பணமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
முதன் முதலாக ரயில்வேத் துறையை சார்ந்த ஒருவர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது இந்தியாவிற்கும், குறிப்பாக இந்திய ரயில்வே துறைக்கும் பெருமை அளித்துள்ளது என்று லாலு தெரிவித்துள்ளார். சுஷில் குமார் பெய்ஜிங்கில் இருந்து திரும்பியவுடன் விழா ஏற்பாடு செய்து கௌரவிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.