மக்களவை உறுப்பினர்களை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாற்று குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவிற்கு சம்மன் அனுப்ப உரிமைக் குழு முடிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார் மாநில எம்.பி.க்கள் குறித்து அவதூறாகப் பேசியுள்ள பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.பி.யாதவ் உள்ளிட்ட எம்.பி.க்கள் மக்களவை உரிமைக் குழுவிடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் குறித்து விசாரித்து வரும் வி.கிஷோர் சந்திர தியோ தலைமையிலான உரிமைக்குழு, நேரில் விளக்கமளிக்குமாறு பால் தாக்கரேவிற்குச் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. எந்தத் தேதியில் அழைப்பது என்று பின்னர் முடிவு செய்யப்படும்.
முன்னதாக சிவசேனை கட்சியின் பத்திரிகையான சாம்னாவில், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மராத்தியர்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.