Publish Date: Sun, 10 Aug 2008 (18:19 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)
அமர்நாத் கோயில் நில விவகாரத்தில் சமூக நல்லிணக்கம் சீர்குலையாத வகையிலும், ஜம்மு, காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் சுமூக தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் இன்று நடந்து சர்வ கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமர்நாத் நிலப் பிரச்சனையை தீர்ப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசித்ததாகவும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இருதரப்பினருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தீர்வு காண்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அமர்நாத் யாத்திரை முன்பு போலவே நடத்தப்பட வேணும் என்று பிரதமர் வலியுறுத்தி உள்ளதால், அமர்நாத் யாத்திரை தொடரும் என்றார்.
அமர்நாத் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் போது, சமூக நல்லிணக்கம் எந்த விதத்திலும் சீர்குலைக்கப்படக் கூடாது என இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்புவதாக தெரிவித்த பாட்டீஸ், சமூக அமைதி சீர்குலையும் வகையில் எவ்வித சம்பவமும் நிகழவில்லை, சில வருந்தத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவை உரிய முறையில் சரி செய்யப்படும் என்றார்.
மேலும் இம்மாநிலத்தில் நிகழும் சம்பவங்களை மக்களுக்கு தெரிவிக்கும் ஊடகங்கள், அதனை தீர விசாரித்து உண்மையுடனும், மக்களின் நம்பிக்கைகள் பாதிக்காத வகையிலும் அவற்றை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அமைச்சர் பாட்டீல், அண்மையில் நிகழ்ந்த கலவரங்களில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.
அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் நடந்த சர்வ கட்சிக் கூட்டத்தில், அருண் ஜெட்லி (பா.ஜ.க), அமர்சிங் (சமாஜ்வாடி) முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆஸாத், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, காங்கிரஸ் சார்பில் சைபுதீன் சோஸ், மோசினா கித்வாய், காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிக்கை, விரைவில் மத்திய அரசிடம் அளிக்கப்படவுள்ளது.
Webdunia
Publish Date: Sun, 10 Aug 2008 (18:19 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)