Publish Date: Sat, 09 Aug 2008 (12:10 IST)
Updated Date: Sat, 09 Aug 2008 (12:10 IST)
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ் ஆகியோர் அமர்நாத் நில விவகாரத்திற்குக் காரணமானவர்கள் என்பதால், அவர்களை உள்ளடக்கிய அனைத்துக் கட்சிக் குழுவைப் புறக்கணிக்க ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி முடிவு செய்துள்ளது.
"மெஹ்பூபா, பரூக், சைபூதின் சோஸ் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துக் கட்சிக் குழுவை நாங்கள் புறக்கணிக்க உள்ளோம். அமர்நாத் நில விவகாரத்திற்கு இவர்கள் மூவரும்தான் காரணம்" என்று ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதி ஒருங்கிணைப்பாளர் லீலா கரண் சர்மா தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் 5 அமைச்சர்கள் உட்பட 18 பேர் கொண்ட அனைத்துக் கட்சி குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சூழ்நிலையை இன்று ஆய்வு செய்கின்றனர்.
அருண் ஜெட்லி (பா.ஜ.க.), அமர்சிங் (சமாஜ்வாடி), சீதாராம் யச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்தியக் கம்யூனிஸ்ட்), மோஹ்சினா கிட்வாய் (காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), மெஹ்பூப் முஃப்தி (பி.டி.பி.), கே.சி.தியாகி (ஐ.ஜ.த.), நரேஷ் குஜ்ரால் (எஸ்.ஏ.டி.), அக்தர் ஹாசன் (பகுஜன் சமாஜ்), ஆர்.சி.பாஸ்வான் (லோக் ஜனசக்தி) ஆகியோர் குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.
பிரித்விராஜ் சவான், ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், சைபுதீன் சோஸ் (காங்கிரஸ்), ரகுவன் பிரசாத் சிங் (ஆர்.ஜெ.டி.),அ.ராசா (தி.மு.க.) ஆகியோர் மற்ற அமைச்சர்கள் ஆவர்.
Webdunia
Publish Date: Sat, 09 Aug 2008 (12:10 IST)
Updated Date: Sat, 09 Aug 2008 (12:10 IST)